Wednesday, March 08, 2006

வீராதி வீர... வீரமார்த்தாண்ட...


தமிழ் திரைப்படங்களில் வரும் வசனங்கள், பெரும்பாலும் (நகைச்சுவை காட்சிகளில் இடம் பெற்ற வசனங்களைத் தவிற) நாம் திரையரங்கை விட்டு வெளியெ வரும்பொழுது நினைவில் நிற்பதில்லை. ஆனால் நம்மை பாதித்த, நம்மை சிந்தனை செய்ய தூண்டிய சில வசனங்களை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிடுவதில்லை.

அப்படி என்னை பாதித்த,என்னை அதிகம் சிந்திக்க வைத்த பல வசனங்களுள் ஒன்று இதோ...

குருதிப்புனல் படத்தில் கமல் ஹாசன் "வீரம்" என்பதற்கு தரும் விளக்கம்.

"வீரம் என்றால் என்னவென்று தெரியுமா? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது தான் வீரம்"

என்ன ஒரு அருமையான விளக்கம். வள்ளுவரும் இதை தான் "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" என்று தன் மொழியில் கூறியுள்ளார்.

Tuesday, March 07, 2006

அமென்-ரா ( கதையா? அல்ல நிஜமா? )


"அமென்-ரா" ( Amen-Ra ) என்னும் எகிப்து இளவரசி கி.மு1500 இல் வாழ்ந்தவள். அவள் மறைந்த பிறகு, அவளது உடலை மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சவப்பெட்டியில் வைத்து நைல் நதிக்கரையோரம் "லக்ஸர்" என்னும் நகரத்தில், பாதாளத்தில் மம்மியாக பதப்படுத்துவதற்காக புதைக்கப்பட்டது. பின்பு கி.பி1890 இல், லக்ஸர்க்கு வந்த நான்கு ஆங்கிலேய செல்வந்தர்கள், மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட அந்த அமென்-ராவால் கவரப்பட்டு, பல ஆயிரம் பவுண்டுகளைக் கொடுத்து அதை விலைக்கு வாங்கினர்.

அவர்களுள் ஒருவர், அமென்-ராவை தான் தங்கியிருந்த விடுதிக்கு எடுத்துச் சென்றார். பின்பு அங்கிருந்து பாலைவனம் நோக்கிச் சென்றவர் திரும்பவில்லை. எஞ்சிய மூவரில் ஒருவனை, எகிப்தியர் ஒருவர் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டார். மற்றொருவன் தன் வீட்டிற்கு சென்றதும் தனது சேமிப்புகள் கொள்ளைபோனதை அறிந்தான். கடைசி ஒருவனும், தீவிர நோயால் அவதியுற்று இறுதியில் தெருவிற்கே வந்துவிட்டான்.

இப்படியாக அந்த அமென்-ரா இங்கிலாந்தைப் பார்க்கும் முன்னே பல துன்பங்கள் தொடர்ந்தாலும் ஒருவழியாக இங்கிலாந்தைச் சென்றடைந்தாள். அங்கு அமென்-ராவை வாங்கிய வியாபாரி, தனது குடும்பத்தார் பலர் விபத்தில் காயமுற்றதால், அதை இங்கிலாந்து அருங்காட்சியகத்திற்கு கொடுத்துவிட்டார். அருங்காட்சியகத்திற்கு வந்த அமென்-ராவை வண்டியிலிருந்து இறக்கும் பொழுது, வண்டி தற்செயலாக பின்னால் சென்று ஒரு பாதசாரியை வதைத்தது. அமென்-ராவை அருங்காட்சியகத்திற்கு உள்ளே எடுத்துச் சென்ற இருவரில் ஒருவர்க்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்றொருவன் திடகார்த்திரமாக இருந்தபொழுதும் இரண்டு நாளில் இறந்துபோனார்.

அமென்-ராவை காட்சிப்பொருளாக வைத்தபோது பிரச்சனைகள் அதிகமானது. அமென்-ரா இருக்கும் சவப்பெட்டியில் உள்ள உருவத்தை தொட்டவரின் குழந்தை சில நாட்களில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தாள். இரவு நேரங்களில் அமென்-ரா இருந்த அறையிலிருந்து வினோதமான சத்தம் வரவே, அமென்-ராவை அருங்காட்சியகத்தின் கீழே ஒரு பொருள் கிடங்கில் வைக்க மேலாளர் உத்தரவிட்டார். உத்தரவிட்டவர் சில நாட்களில் மாண்டு போகவே, செய்தி பத்திரிகையை எட்டியது. ஒரு பத்திரிகைக்காக அமென்-ராவை படமெடுத்தவர், அதை பிரதியிட்டபொழுது அதில் கொடூரமான ஒரு முகம் தெரியவே பயத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

பிறகு, அமென்-ராவை தனியாருக்கு விற்றுவிடுதென அருங்காட்சியகம் முடிவு செய்து அதை ஒருவரிடம் விற்றது. அதை துணிந்து வாங்கியவர் பின்பு பல பிரச்சனைகளுக்கு ஆட்படவே அதை அருங்காட்சியகத்திடம் கொடுத்தபொழுது அவர்கள் அதை வாங்க மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி அமென்-ராவை ஒரு பரணில் அடைத்தார்.

இப்படியாக தனது பத்து வருட பயனத்தில் இருபதிற்கும் மேற்பட்ட உயிர்களின் அழிவுக்கு காரணமாக இருந்த அமென்-ராவைக் காணவந்த ஒரு அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர், அமென்-ராவால் நடந்ததாகச் சொல்லப்படும் அழிவுகள் அணைத்தும் கட்டுகதை என்றும், அவை அணைத்தும் தற்செயலாக நடந்தது என்று தான் நிரூபிக்கபோவாதாகவும் கூறி, அமென்-ராவை நியூயார்கிற்கு எடுத்துச் செல்ல முற்பட்டார்.

1912 வருடம் ஏப்ரல் மாதத்தில், நியூயார்கிற்கு தனது முதல் பயனத்தை மேற்கொள்ளும், ஒரு நட்சத்திர வெள்ளை நிற சொகுசு கப்பலில், அவர் அமென்-ராவை அழைத்துக்கொண்டு நியூயார்கிற்கு புறப்பட்டார். ஏப்ரல் 14 ஆம் தேதி நள்ளிரவில், யாரும் முன்னர் கேட்டிறாத வகையில் ஒரு பேரழிவில் இளவரசி அமென்-ரா தன்னுடன் பயனம் செய்த 1500 பயனிகளுடன் ஆழ்கடலின் அடியில் தஞ்சமடைந்தாள்.

அந்த சொகுசு கப்பலின் பெயர் "டைட்டானிக்".

Thursday, March 02, 2006

காதல் வலி...


காதலியே.... உன்னால்
எனக்கு எப்பொழுதும்
காதல்... வலியே...

காதலியாய் நீ
இருந்தபோதும்
காதல்... வலியே...
காரணம்,
மகிழ்ச்சியின்
முடிவிலி வலியே...

"இருந்த" என்பதால்
இல்லை இப்பொழுது
காதலியாய்.
இருக்கின்றாய்
காதல் வலியாய்...

மருத்துவத்தில், மெய்யில்
வலி வர
வழி இரண்டு.
தீவிர வலி
திடீரென்று வருவது.
தொடர் வலி
தொடர்ந்து வருவது.

மெய் வலியின்
மூலம் புரியவில்லை
எனக்கு.
வலி மட்டும்
மெய்யன புரிந்தது
உயிர்க்கு.
அது,
திடீரென்று
தீவிரமாய் வந்து
தினம் தொடரும் வலி
காதல் வலியே...

காதல் வலிக்கு
வலி நிவாரணம்
இல்லை.
இருந்தால் அது
காதல் வலியில்லை.

காதலியே.... உன்னால்
எனக்கு எப்பொழுதும்
காதல்... வலியே...

- தமிழ் தாசன்

Wednesday, March 01, 2006

குருடுங் குருடும்...


நாம் அனைவரும் நம்மிடம் உள்ள அறியாமையை அகற்றவேண்டுமெனில், அறியாமையை அகற்றும் திறன் படைத்த குருவிடம் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் பொழுது நாம் அறிந்த கொள்ள வேண்டியவற்றின் மீது நாம் கொண்டிருந்த கற்பனையை முற்றிலும் அகற்றி விட்டுச் செல்ல வேண்டும். இல்லையனில் நம்முடைய கற்பனையே, நமக்கும் குருவுக்கும் இடையே திரையாக இருந்து, நம் அறியாமையை அகற்றிக்கொள்ள தடையாக இருக்கும்.

சமீபத்தில், படித்ததில் பிடித்த இதனைப் போன்றதொரு வாழிவியல் நெறியை விளக்கத்துடன் உங்களுக்காக இதொ...

மெய்யான குருவை சென்றடைவது அதிமுக்கியம் என்றும், அப்படி சென்றடைய தவறினால் ஏற்படும் விழைவையும், திருமூலர் தன் திருமந்திரத்தில் அபக்குவன் ( பொய்யான குரு) என்னும் தலைப்பில் கூறியுள்ளார்.

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடி
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.


விளக்கம்:
அறியாமையினை நீக்கும் மெய்குருவினை கைக்கொள்ளாதவர், அறியாமை அகற்றும் நெறியே தெரியாத பொய்குருவினை மெய்யன கொள்வார் எனில், அங்கனம் வழிகாட்டத் தெரியாத குருடும், குருடும் கூடி குருட்டு ஆட்டம் கொண்டு குழியில் விழுவது போன்று பொய்குருவும், அவரை மெய்யன கொண்டோரும் அறியாமை என்னும் குழியில் விழ்வது உறுதி.